செவ்வாய், 30 நவம்பர், 2010

ஒப்பாரிப்பாடல்

ஒப்பாரி தாய்க்கு
தாவார பஞ்சு மெத்த
தாயாரா தூங்கும் மெத்த
தாயாரு இருக்குமட்டும் – எனக்கு
தண்ணி குளியலுண்டு
தங்கி வர நாயமுண்டு – இன்னிக்கி
தாயாரு இல்லாம – எனக்கு
தண்ணி குளியலில்ல
தங்கி வர நாயமில்ல
ஏலக்கா பஞ்சு மெத்த
ஈஸ்வரியா தூங்கும் மெத்த
ஈஸ்வரியா இருக்குமட்டும் – எனக்கு
எண்ண குளியலுண்டு
இருந்து வர நாயமுண்டு – இன்னிக்கு
ஈஸ்வரியா இல்லாம – எனக்கு
எண்ண குளியலில்ல
இருந்து வர நாயமில்ல

ஒப்பாரி - தந்தைக்கு

கட்டு கட்டா தென்ன மரம்
கல்கண்டு காய்க்கும் மரம்
கலகண்டு தின்ன மொவ – இன்னிக்கு
கவலப்பட்டு நிக்குறோமே
முட்டு முட்டா தென்ன மரம்
முட்டாயி காய்க்கும் மரம்
முட்டாயி தின்ன மொவ – இன்னிக்கு
மொகம் சோந்து நிக்கிறோமே
தெக்குத்தி வெங்காயம் – நாங்க
தென் மதுர பாப்பாத்தி – இந்த
திண்ணக்கி வந்தவ – எங்கள
திண்ண பெருக்குன்னா
தெருவு புறமா நில்லுன்னா
எங்கள பெத்த அய்யா இருந்தா – நாங்க
திண்ண பெருக்க மாட்டோம்
தெருவு புறமா நிக்க மாட்டோம்
வட்க்குத்தி வெங்காயம் – நாங்க
வட மதுர பாப்பாத்தி – ஒங்க
வளவுக்கு வந்தவ – எங்கள
வாச பெருக்குன்னா
வட புரமா நில்லுன்னா
எங்கள பெத்த அய்யா இருந்தா – நாங்க
வாச பெருக்க மாட்டோம்
வட புறமா நிக்க மாட்டோம்.
பாடியவர் : காவேரி , மருங்கூர், கடலூர் மாவட்டம்.

1 கருத்து:

Venkat Palani சொன்னது…

nice........... im also going to add the related the same...... please advice......... venkat19812007@yahoo.co.in